வியாழன், 15 ஏப்ரல், 2010

ஒரு பஸ் பயணம்...

சென்ற வாரம் ஒரு வேலையாக சென்னை சென்றுவிட்டு திருத்தணிக்கு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தேன். பஸ் ஏறும் போதே மணி இரவு 10ஐத் தொட்டிருந்தது. திருவள்ளுர் வந்த போது 11ஐத் தாண்டியிருந்தது. திருவள்ளுரில் 45 வயது மதிக்கத்தக்க எளிய கிராம மனிதர் ஏறினார். பாண்டுர் செல்ல டிக்கட் கேட்டார். பாண்டூர் என்பது திருவள்ளுர் திருத்தணிக்கு இடைப்பட்ட கிராமம். திருவள்ளுரில் இருந்து சுமார் 10 கி,மி தொலைவிருக்கும். கண்டக்டர் கடுப்புடன், “பாண்டூர் எல்லாம் பஸ் நிக்காது, இது எக்ஸ்பிரஸ். கீழே இறங்கு” என்றார். ஏறிய பயணி, “1 மணி நேரமா நிக்கிறேன், எந்த பஸ்ஸிம் வரலை. பாண்டூரில் நிறுத்தக்கூட வேண்டாம் கொஞ்சம் ஸ்லோ பண்ணா போதும் நான் இறங்கிக்கிறேன்” என்றார். இப்போது கண்டக்டருடன் டிரைவரும் சேர்ந்து கொண்டார். பயணியை கண்டபடி திட்ட ஆரம்பித்தார். இறங்குமாறு கட்டாயப்படுத்தினார். விதிமுறைகளைப் பேசினார். “ரொம்ப அவசரம் என்றாலும் இப்படித் தான் ரூல்ஸ் பேசுவிங்களா” என்றபடி பயணியும் திட்டிக்கொண்டே இறங்கிச்சென்றார். கண்டக்டர் தாம் நினைத்தை நடத்தியதால் உற்சாகமாக டிரைவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

எனக்கு கீழே இறங்கிச்சென்ற அந்த நபருக்கு என்ன அவசரமிருக்கும் என்று நினைக்கத் தோன்றியது. ஒரு வேளை அந்த கிராமத்தில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம் அல்லது அவரது குழந்தைகளும் குடும்பம் அவருக்காக காத்துக்கொண்டிருக்கலாம் அல்லது அவசரத் தேவைக்காக பணத்தை ஏற்பாடு செய்ய நகருக்கு வந்திருக்கலாம். எப்படியோ அன்றிரவு அவருக்கு நீண்ட இரவாகத் தான் இருந்திருக்கும். “என்றைக்குமே வாய்த்ததில்லை - ஜன்னலோர இருக்கை: இரண்டு நகரங்களுக்கு இடைப்பட்ட சாலையிலிருக்கும் கிராம மக்களுக்கு” என்ற ஆனந்த விகடனில் சமீபத்தில் படித்த கவிதை ஞாபகம் வந்தது. இங்கு இருக்கையல்ல பஸ்ஸில் ஏறுவதற்கான வாய்ப்புக்கூட வழங்கப்படவில்லை.

எங்களுடன் பணிபுரியும் மூத்தப் பணியாளர் குரு அடிக்கடி, “ஒரு செயலை சரியாக செய்வதைவிட சரியான செயலை செய்வது மிகமுக்கியம்” என்பார். கண்டக்டர் அந்த சமயத்தில் பாண்டூர் நிறுத்தமாட்டேன் என்பது விதிகளின் படி சரியானதென்றாலும் சூழ்நிலையை கணக்கில் கொண்டு அவருக்கு வாய்ப்பளித்திருக்கலாம். திருவள்ளூரில் அவர் சண்டை போட செலவிட்ட நேரத்தில் அவரை ஏற்றிக்கொண்டு பாண்டூரில் நிறுத்திச் சென்றிருக்கலாம்.

5 கருத்துகள்:

  1. நல்லது ஜானகி.

    நான் மேல்நிலைப்பள்ளியில் பயிலும்போது தினமும் பேருந்தில் செள்ளவேண்டியதாய் இருந்தது. ஒருநாள் மாலை பள்ளியிலிருந்து எங்கள் ஊருக்குத் திரும்புகிற பேருந்தில் எனது நண்பர்களுடன் பயணித்தேன். எங்கள் ஊரின் பேருந்து நிலையத்திற்கு முந்தைய நிறுத்தத்தில் ஒரு மத்திய வயது நபர் இறங்கினார். அவர் இறங்கி தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும் முன்பாக, ஓட்டுனர் பேருந்தை நகர்த்த, அந்த மனிதர் தடுமாறி விழுந்துவிட்டார். பேருந்து சலனமின்றி நகர்ந்து சென்றது. உள்ளிருந்த மற்ற பயணிகளின் சின்னச் சின்ன முணுமுணுப்புகள் மட்டுமே எதிர்வினையாக இருந்தது.

    என் நண்பன் சூர்யகுமார், (அவனுக்கு அப்போது வயது 16) எழுந்து நடத்துனரிடம் பேருந்தை நிறுத்துமாறு சப்தமிட்டான். பேருந்து நின்றது. நடத்துனர் வழக்கம்போல வாக்குவாதத்தில் இறங்கினார். சூர்யா கேட்டான் "உங்கள் தகப்பனாராய் இருந்தால் இப்படிச் செல்வீர்களா?". நடத்துனர் கேட்பதாய் இல்லை. சூர்யா பயணிகளிடம் திரும்பினான்; அதே கேள்வியைக் கேட்டான். பயணிகளுக்கு (எனக்கும்தான்) அப்படி ஒரு "முதல் குரல்" தேவையாய் இருந்தது. அனைவரும் சேர்ந்து நடத்துனரைத் திட்டத் தொடங்கினர். "என்ன செய்ய சொல்றீங்க?" என்றார் நடத்துனர். யாரிடமும் பதில் இல்லை. என் சூர்யாதான் மீண்டும் சொன்னான், "இறங்கி அவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் ட்ரீட்மென்ட் கொடுங்க சார்".

    அரசு மருத்துவமனைக்கு பேருந்து நகர்ந்தது.

    பார்வையாளனாய் மட்டும் இருப்பதில் பாதுகாப்பு இருக்கிறது. இப்படி நிறைய எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான் நண்பரே. பார்வையாளனாக இருப்பதில் நாம் நமக்குள் விவாதிக்கிறோமே தவிர, அதை வெளிப்படுத்த எண்ணுவதில்லை. நீங்கள் சொல்வது போல் வேறு யாரிடமாவது இருந்து முதல்குரல் வெளிப்படட்டும் என்று நினைக்கிறோம். இதில் பாதுகாப்பு மட்டுமில்லை, யாரும் தலையிடாத போது, ஒரு நிகழ்வு தன்னை எப்படி இயல்பாய் வெளிப்படுத்துகிறது என்பதும் சமுகத்தின் பொது உளவியல் எப்படி உள்ளது என்பதும் நிதர்சனமாக தெரியவரும்.

    பதிலளிநீக்கு
  3. இது போல பல சமயங்களில் பார்த்திருக்கேன். பல முறை சண்டையும் போட்டிருக்கேன். ஆனால் பொதுவில் தனி ஒருவனாய் சண்டை போடும்போது தோல்வி தான் மிஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
  4. "எங்களுடன் பணிபுரியும் மூத்தப் பணியாளர் குரு அடிக்கடி, “ஒரு செயலை சரியாக செய்வதைவிட டு, செயலை செய்வது மிகமுக்கியம்” என்பார்."

    சரியானஅடிப்படை அறிவு கூட இல்லாதவர்க்கு எங்கே புரியப்போகிறது,
    இதனைப்போன்ற ஒரு அனுபவம் எனக்கும் உண்

    பதிலளிநீக்கு
  5. எல்லா நேரத்திலும் ரூல்ஸ் பேசுவது சரி அல்ல. நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு