வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஒரு கடிதம்... ஒரு விளக்கம்...

நண்பர் ஜானகிராமனுக்கு,

வணக்கம்.

நேற்று உங்களுடன் மன்னிப்பு தொடர்பாக பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், மன்னிப்பு எல்லாவற்றிற்கும் சாத்தியமில்லை என்ற உங்களது வாதம் அப்போது ஏற்புடையதாகத்தான் இருந்தது. பின்னர் யோசிக்கும் போது மன்னித்தலும் மறத்தலும் இல்லாமல் போகும் போது வாழ்க்கையே இல்லாமல் போகுமே என்ற கருத்து மேலோங்கியது.

மன்னித்தலும் மறத்தலும் வார்த்தைகளில் தான் வேறு வேறு. செயலில் ஒன்றுதான். மன்னிப்பு தருகின்ற போதே மறத்தலும் தொடங்க வேண்டும். அப்போதுதான் ஆத்மார்த்தமான மன்னிப்பு அளித்தாக ஆகும்.

மன்னித்துவிடுகிறேன் என்ற வார்த்தையை வழங்கிவிட்டு, அந்த சூழலை மறக்காமல் இருக்கும் போது எதற்காக மன்னிப்பு கோரினோரோ (நிகழ்வு) அது ஆழ்மனதில் இருந்து கொண்டுதான் இருக்கும். மன்னிப்பு வழங்கியவர் மன்னிப்பு பெற்றவரைப் பார்க்கும் போதெல்லாம் சஞ்சலத்துடன்தான் இருப்பார்.

பராவாயில்லை என்று சொல்லிவிட்டு அந்தக்கனமே மறந்துவிடுபவர்கள் பாக்கியசாலிகள். மறத்தலே உன்மையான மன்னிப்பு. குடும்ப வாழ்க்கை முறைக்கு மிக முக்கியம் (அல்லவைகளை) மறத்தல் அவசியம். இது நிறுவன வாழ்க்கைக்கும் பொருந்தும்.

தீ்ங்கு செய்தவருக்கும் நன்மை செய்வது தவத்தால் கிடைக்கும் மனிதப் பண்பு. இது மறத்தலுக்கும் அடுத்த நிலை.

எதை நினைவில் கொள்ள வேண்டும்?

நன்றியை..... (மட்டுமா)

உங்களிடம் விட்டு விடுகிறேன்.

---------------------------------------------------------------

வணக்கம் கண்ணன். உங்களுடைய எதிர்வினை நன்றாக இருந்தது. எனக்குள் சில அடிப்படை கேள்விகளை எழுப்பியது. உண்மையில் மன்னிப்பும் தண்டிப்பும் பற்றிய விரிவான சிந்தனைக்கு விதையாக இருந்தது.

சென்ற வாரம் என்னுடைய மைத்துனன் வீட்டிலிருந்து போன். மைத்துனனின் 3 வயது பையன் பேசினான். அவனை அவனுடைய அப்பா கடுமையாக அடித்துவிட்டதாகவும் என்னிடம் ஞாயம் கேட்கும் படி அழுதுகொண்டே கேட்டான். நானும் என்னுடைய மைத்துனனை விசாரித்தபோது, அந்தப் பையன் சொல் பேச்சுக் கேளாமல் வீட்டின் 5 அடி மதில் சுவரில் ஏறி விளையாடுவதாகவும் ஆபத்துடன் தாண்டுவதாகவும் குறிப்பிட்டு இதனை தடுத்து பயம் தர பையனை அடித்ததாக சொன்னான். நான், பேசி அவனை வழிக்கு கொண்டுவந்திருக்கலாமே, இத்தனை வன்முறை தேவையா என்ற போது, எனது மைத்துனன் சிரித்துக்கொண்டே, உன் மகன் எப்பவாவது இது போல் செய்யும் போது நீ எப்படி நடந்து கொள்வாய் எனப் பார்க்கிறேன் என்றான். பிறகு இந்த ஒரு வாரமாக மைத்துனனின் மகன் மதில் சுவரில் ஏறுவதில்லை.

ஆக, மன்னிப்பும் தண்டனையும் தரப்படுவதின் அடிப்படை
1. தவறு இழைத்தவர் தமது தவறை உளப்பூர்வமாக உணர வேண்டும்.
2. அவர் மறுபடி அந்தத் தவறை செய்யக்கூடாது, செய்யும் எண்ணம் தோன்றக்கூடாது.
3. மன்னிப்போ தண்டிப்போ, சமுகம் எது தவறு எது சரி என்று பிரித்தறியக் கற்றுக்கொள்ளவேண்டும்.

இதில் நான் இரண்டையுமே கையாளத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். மன்னிப்பினால் எதிர்பார்க்கப்பட்ட விளைவு கிடைக்காது என தெரிந்த பிறகு அல்லது உறுதி செய்துகொண்ட பிறகு தண்டிப்பினை கையெடுக்கவேண்டும். இதைத் தான் வேதத் தத்துவம் சாம, பேத, தான, தண்ட என 4 வகை நீதிமீட்டெடுப்பு முறைகளாக வகுத்துள்ளது.

கண்முடித் தனமாக நான் மன்னிக்கமட்டும் தான் செய்வேன், தண்டனையளிக்க மாட்டேன் என்பது தனிமனித அறப்பண்பாக இருக்கலாமே ஒழிய அது பொதுநன்மைக்கு பொருத்தமானதாகாது. "என் கையில் இருப்பது பூச்செண்டா துப்பாக்கியா என்பதை எனது எதிரி தீர்மானிக்கிறான்" என்ற மாவோவுடைய தத்துவம் கவனத்தில் கொள்ளத் தக்கது.

வேறொறு கோணத்தில், மன்னிப்பென்பது, மறைமுகமாக அதே போன்ற தவறை நான் செய்ய எடுத்துக்கொள்ளும் உரிமையில் போய் முடிகிறது. நீ தவறுக்கு தண்டனையளித்தால் நீயும் அதே தவறை செய்ய பயப்படுவாய். ஆனால் நீ மன்னித்து விடும் போது, பிற்பாடு நீ அந்தத் தவறை செய்தாலும் மன்னிப்பை நீயும் எதிர்பார்ப்பாய்.

சன் டிவிக்கும் திமுகவுக்கும் உறவு சரியாக இல்லாத போது, சன் டிவி ஸ்ப்பெக்டரம் ஊழலை வெளிக்கொண்டுவந்தது. பிற்பாடு அவர்களுக்கிடையே உள்குத்து நிகழ்ந்த பிறகு, சன் டிவி பெருந்தன்மையுட்ன் ஸ்பெக்டரம் ஊழலை மறந்தது. இந்த மன்னிப்போம் மறப்போம் எந்த வகை அறம்?

ஆக, மன்னித்தலும் தண்டித்தலும் இரண்டுமே சரிதான். மிகத் தேவையானதும் கூட. யாரிடம், எப்போது உபயோகப்படுத்துகிறாய் என்பதைப் பொருத்து அதன் மதிப்பு மாறுபடும்.

2 கருத்துகள்:

  1. சன் டிவிக்கும் திமுகவுக்கும் உறவு சரியாக இல்லாத போது, சன் டிவி ஸ்ப்பெக்டரம் ஊழலை வெளிக்கொண்டுவந்தது. பிற்பாடு அவர்களுக்கிடையே உள்குத்து நிகழ்ந்த பிறகு, சன் டிவி பெருந்தன்மையுட்ன் ஸ்பெக்டரம் ஊழலை மறந்தது. இந்த மன்னிப்போம் மறப்போம் எந்த வகை அறம்?
    அருமையான விளக்கம்...

    பதிலளிநீக்கு