ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

ஜப்பான் பற்றி...

சமீபத்தில் கோவளம் கிராமத்தில் நடத்தப்படும் திட்டத்துக்கு நிதி உதவிவரும் ஜப்பானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசியரை சந்தித்தேன். அவரது பெயர் டேவ் பொக்மென். அடிப்படையில் அமெரிக்கர். ஜப்பானில் மொழி கற்றுத்தர பேராசிரியாக சேர்ந்து, யூகா எனும் ஜப்பானிய பெண்ணைத் திருமணம் செய்தவர். யூகாவும் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக கோவளம் கிராமத்தில் தம்மால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அவருடன் பேசும்போது, ஜப்பான் பற்றியும் அம்மக்கள் பற்றியும் தற்காலப்பார்வை கிடைத்தது.

ஜப்பான் முன்பு போல் இல்லை. அவர்களுக்கும் அமெரிக்க மோகம் ஆட்டிப்படைக்கிறதாம். பெரும்பாலான ஜப்பானிய பெண்களின் கனவு ஒரு அமெரிக்கரை மணப்பதாக இருக்கிறது என்றார். ஜப்பானிய ஆண்கள், குறிப்பாக தொழில்நுட்பம் சாராத படிப்பு படித்தவர்களுக்கு பெண் கிடைப்பதே அரிதாம். அவர்கள் தமது திருமணத்துக்காக இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பெண்களை இறக்குமதி செய்து கொள்வதாக குறிப்பிட்டார்.

அதே போல் புத்த மதத்தின் இருப்பும். மக்களுக்கு கடவுள் வழிபாட்டுக்கெல்லாம் நேரமிருப்பதில்லை. ஜப்பானிய புத்த மதத்தை “மரணச்சடங்கு புத்தமதம்” என அழைப்பார்களாம். தமது உறவினரின் மரணத்தின் சடங்குகளின் போது மட்டும் புத்த மதப் பழக்கங்களை ஞாபகப்படுத்திக்கொள்வதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. புத்த மதத்தைப் போலவே ஷிண்டோ மதப்பிரிவும் ஜப்பானில் பிரபலமானது. ஷிண்டோ பிரிவு இயற்கையை, ஒருவித அமானுஷ்யத்தை வழிபடும் தன்மை கொண்டது. இப்போதெல்லாம் ஒரு ஜப்பானியர் ஷிண்டோவாக பிறந்து, அமெரிக்கராக வாழ்ந்து, புத்தராக இறக்கிறார் என அவர் வேடிக்கையாக குறிப்பிட்டார்.

மற்றபடி ஜப்பானியரின் அறிவுத் திறன், கடின உழைப்பு நாளுக்கு நாள் கூடிவருவதாக பெறுமையுடன் குறிப்பிட்டார். என்னதான் பணம் சம்பாதித்தாலும், வசதிகளைப் பெருக்கிக் கொண்டாலும், நமது ஆணிவேரை அறுத்துவிட்டு ஒட்டுண்ணியைப் போல வேறு ஒரு மரபைச் சார்ந்து தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது எப்படி சரியாகும் என்று யோசித்தேன். வீட்டில் அகிரா குரோசவுடைய சாமுராய் படத்தை மறுபடியும் பார்க்கவேண்டும் என மனது உரத்துக்கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக