புதன், 24 பிப்ரவரி, 2010

பொங்குமாக்கடல்...

ஒருமுறை ஆசைத்தம்பியின் வீட்டுக்கு சென்றபோது, சாத்வீகா (அவர்களது குழந்தை), என்னிடம் வந்து எனது பேனாவினை எடுத்துக்கொடுத்து தனது உள்ளங்கையில் ஆட்டுக்குட்டியின் படத்தை வரையுமாறு சொன்னாள். நானும் தலை, உடல் வால் என்று அந்தச் சின்னக்கையில் ஆட்டினுடைய படத்தை வரைந்தேன். நான் வரைந்த படத்தைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த அவள், இது ஆட்டுக்குட்டியில்லை, கோழி என்று சொல்லிவிட்டு அதனை மற்றவருக்குக் காட்ட ஓடினாள். எனக்கு ஆடுபோல் தெரிந்த அந்தப்படம் அவளுக்கு கோழியாக தெரிந்திருக்கிறது. 3 வயது குழந்தையின் பார்வையும் எனது பார்வையும் வேறுபடுகிறது என்றால், இந்த ஜனத்திரளின் கருத்து வேறுபாடுகளுக்கு அளவேது. எல்லா நிகழ்வுகளும் வெற்றிகளும் தோல்விகளும் நதியைப்போல வெளியிலிருந்து அனுபவமாய் மனக்கடலுக்குள் கலக்கிறது. மனக்கடல் அனுபவங்களின் வாயிலாக பொங்கியடங்குகிறது. கீதை, பரம்பொருளை கடலாகவும் உயிரினத்தை நதியாகவும் உருவகப்படுத்தியிருக்கும். எப்படி நதி கடலுடன் கலந்து தனது தன்மையை இயல்பாக மாற்றிக்கொள்கிறதோ அதேபோல் வெளி அனுபவங்கள் மனமென்னும் பொங்குமாக்கடலில் கலந்து சிறு அலைகளாக, ஆழிப்பேரலையாக எனது செயல்பாடுகளின் வழியே வெளிப்பட்டு நன்மையையும் சிதைவையும் ஒருங்கே தருகின்றன. “தாமே தமக்குச் சுற்றமும்; தாமே தமக்கு விதிவகையும்” என்ற மாணிக்க வாசகம் மட்டுமே உண்மையென உள்ளம் உரத்துக்கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக