“மலைகள் நீந்திக் கொண்டுருக்கின்றன;
ஆறு சலனமற்று இருக்கிறது”
ஒரு வருடத்துக்கு முன், ஓர் பின்மாலை நேரத்தில் மக்கள் கல்வி நிலையத்திலிருந்து மதுரைக்கு வர வேண்டியிருந்தது. விரும்பியே நடைபயணத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு விலக்குச் சாலைக்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தேன். கண் முன்னால் வெளிச்சம் குறைந்து இருள் போர்த்திக் கொள்ளும் அந்தத் தருணம் ஆச்சரியமாக இருந்தது. தூரமும் நீண்டு கொண்டே இருப்பதாகபட்டது. முன்பு அகாடமியில் படிக்கும் பொழுது வாரம் ஒருமுறைக்கு குறையாமல் இது போல் நடந்து சென்று கொண்டு இருப்போம். அப்போது தெரியாத தூரம், தற்போது தெரிய ஆரம்பித்த போது தான், எவ்வளவு தூரம் இயற்கையை விட்டு விலகி விட்டேன் என்பது புரிந்தது. தேய்பிறை நிலா சில நட்சத்திரங்களுடன் கூட வந்து கொண்டிருந்தன. இது போல், நிதானத்துடன் வானத்தைப் பார்த்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும் என என் மனது சொல்லியது. நாம் விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளில் நாமே சிறை வைக்கப்பட்டது போலிருந்தது. நான் அன்று பார்த்த அதே தேய்பிறை நிலாவைத் தானே புத்தரும், கிருஸ்துவும், காந்தியும் பார்த்துப் இருப்பார்கள்? யுகசாட்சியாய், அன்றிலிருந்து இன்றுவரை இருந்துவரும் வானம், நிலா, நட்சத்திரம் எல்லாம் எனக்கு இயற்கை மீது பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. நாவுக்கரசர் போல், உலன் எனில் உலன்; இலன் எனில் இலன் என்று உலக உயிர்க்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் ஓர் பரம்பொருளை நெஞ்சம் நினைத்துக் கொண்டது.
பிறகு விலக்குச் சாலையில் கிடைத்த வண்டியை பிடித்து, வத்தலகுண்டு வந்து சேர்ந்து, தூங்கி விழித்து, வழக்கம் போல் அடுத்த நாள் வேலைகளில் ஈடுபட்ட பின் நிலா, வானம், நடைப்பயணம் எல்லாம் மறந்து போய் இருந்தது.
இப்படித்தான் பெரும்பாலும் நிகழ்ந்து விடுகிறது. ஓர் விபத்தாகத்தான் சுயத்தைப் பற்றி திரும்பிப் பார்க்கும் தருணங்கள் கிடைக்கின்றன. நாமாக விருப்பப்பட்டு நம்மை நமக்குள் ஆழமாக பார்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை நாம் என்றுமே வைத்துக் கொண்டதில்லை. அனுபவம் என்பது மக்களை, நகரங்களை, இயற்கையை காண்பது மட்டும் அல்ல. வாழ்வின் இயக்கமே அனுபவம் தான் என்று அன்றைய நடைப்பயணம் எனக்கு உணர்த்தியது. ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஓர் சிறகை கொண்டுருக்கிறான். அது அவனை ஓரு வயதிலிருந்து இன்னொரு வயதுக்கு, மெதுவாக கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கும், அறியாமையிலிருந்து விழிப்புக்கும், அறிந்ததிலிருந்து ஞானத்திற்கும் என அதன் சிறகுகள் அசைந்தபடி இருக்கின்றன (எஸ். ராமகிருஷ்ணன்) ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் நாம் ஆற்றுப்படும் போது, நமது உள்ளுணர்வில் சிறகுகளின் மாற்றம் நமக்கு பார்க்கக்கிடைக்கும். சித்தார்த்தனுக்கு 20 வருட தவம் தராத மெய்ஞானத்தை அவன் தன் தவத்தை துறந்து போதிமரத்தின் கீழ் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கும் போது சட்டென மின்னலாய் மெய்ஞானம் அவனுள் இறங்கி அவனை புத்தனாக்கிய ஆற்றுப்படுதலை, செயலற்ற செயலின் உச்ச இயக்கமாக லாவோட்சு உரத்து கூறிவந்தார்.
எல்லா கடற்பருந்துகளும் தமது இரையினைத் தேட கொடுக்கப்பட்ட கருவியாக சிறகினை பார்த்த போது ஜொனாதன் லிவிங்ஸ்டன் என்ற கடற்பருந்து மட்டும் பறப்பதை ஓர் தவமாகச் செய்ய கிடைத்த வரமாக சிறகுகளை கண்டது போல் விருப்பு வெறுப்பற்று, என்னை நானே ஓர் மூன்றாவது நபராக நிறுத்தி கடந்த காலத்தின் எனது செயல்களை தொகுத்துப் பார்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன். ஏனெனில் சலனமற்ற நதியில் தான் அருகிலிருக்கும் மலை நீந்தும் அதியசம் நடக்கிறது!
கன்றுகுட்டிக்கு இடம் தரவோ, சக பயணிக்கு பேருந்தில் இடம் தரவோ விருப்பம் இல்லாமல் இல்லை. பிறரின் கவனத்துக்கு உள்ளாவதில் சுயம் உணரும் ஒருவித கூச்சத்தைத் தவிர்க்கும் வழிஎன்றே முகம் திருப்பிக் கொள்கிறோம்.
பதிலளிநீக்குசுயத்தைத் தேடவா தொலைக்கவா?