புதன், 24 பிப்ரவரி, 2010

மக்களைப் போற்றுதும்...

ஈரானில் சென்ற வருடத்தின் ஒருநாளில், தீவிரவாதத் தாக்குதலால் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் அடுத்த நாள் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் ஈரான் குடிமகன் ஒருவர் தமது சமுகப்பணிக்காக தேசியவிருது பெறும் நிகழ்வு படத்துடன் இடம்பெற்றிருந்தது. தேசத்தை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல் 3வது அல்லது 4வது பக்கத்தில் அச்சிட்டிருந்தனராம்.

இந்த செய்தி எனக்கு முக்கியமானதாகப்பட்டது. மனிதன் நம்பிக்கையிழக்கும் போதும், பயம் அவனை ஆட்கொள்ளும்போதும் நல்லெண்ணத்தை விளைவிக்கும் நற்செய்தியை முக்கியத்துவப்படுத்துவது அவசியமெனப்படுகிறது. நற்செய்தி மக்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். மாறாக பிரச்சனைகளை, தவறுகளை பெரிதுபடுத்தி அதையே பரப்பும் போது, நமது சக்தி நீர்த்துப்போவதை தவிர்க்கமுடியாது.

கனகம்மாசத்திரம் பகுதி விழாவின் போது, ஒரு உறுப்பினரின் மகன், முளைப்பாரியை அலங்கரிக்க பூக்கள் எடுத்துவர தோட்டத்துக்கு சென்ற போது பாம்பு கடித்துவிட்டது. அந்த நிலையிலும், அவர் தமது மகனை உறவினர்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு நமது பகுதிவிழாவில் கலந்து கொண்டார் என்பதை அவருடன் உரையாடியபோது தெரிந்ததும் எனக்கு சிலிர்த்தது. நிச்சயம் என்னால் அது போன்ற சூழலில் அவரைப்போல் இருந்திருக்க முடியாது. அவருக்கு இந்த நம்பிக்கையும் சக்தியையும் கொடுத்தது எதுவெனப் பார்த்தால், நமது களஞ்சியத்தின் கண்ணுக்குத் தெரியாத சக்தி விளங்கும்.

இதேபோல், லட்சுமாபுரம் பகுதியின் விழாவின் போது பந்தல் அமைக்க பணியாளர்கள் வராத நிலையிலும், களஞ்சிய பொறுப்பாளர்களே அதிகாலையிலிருந்து பந்தல் அமைத்து சிறு காயங்கள் பட்டது, சின்னம்மாபேட்டை பகுதி விழாவின் போது 100 பேர் மட்டுமே அமரக்கூடிய சமுதாயக்கூடத்தில் மின்சாரமில்லாமல் 300க்கும் குறையாத உறுப்பினர்கள் வேர்வை சொட்டச்சொட்ட நிகழ்ச்சி முடியும் வரை அமைதி காத்தது, நெமிலிப்பகுதியில் டேப்ரிக்காடரில் இசைத்த களஞ்சியப்பாடலுக்கு டயனாஸ்டிக் மனநிலையில் 50 வயதுக்கும் மேற்பட்ட களஞ்சிய உறுப்பினர்கள் சிலர் தம்மை மறந்து ஆடிமகிழ்ந்தது என வட்டாரம் நடத்திய 8 பகுதிவிழாக்களும் எதாவது ஒரு நற்செய்தியை, மக்களின் ஆற்றலை எனக்கு உணர வைத்தது.

மக்களைப் போற்றுவோம். நமது நிறுவனப்பெருமை குறித்தும், பங்களிப்பு குறித்தும் பெருமிதம் கொள்வோம். நல்ல செயல்களை வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் உரத்து கூறுங்கள். குளத்தில் எறிந்த கல்லைப்போல சமூகத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் அலையாய் பரவிச் செல்லட்டும். தவறு மற்றும் பிரச்சனைகள் பற்றி விளக்கமுற்படாமல் அதைத் தீர்க்கும் முயற்சிகளில் சிறு பங்கினையாவது எடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக