புதன், 24 பிப்ரவரி, 2010

மனிதன் படைத்தக் கடவுள்...

கடந்த 4 ஆண்டுகளாக நான், கிரண் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோர் வருடத்துக்கு ஒருமுறை 2 - 3 நாட்கள் தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாய் அதிகம் அறிப்படாத சிவஸ்தலங்களுக்கு சென்று வருகிறோம். இந்தப் பயணம் உள்ளார்ந்த புத்துணர்ச்சியையும் சுயம் சார்ந்த ஆற்றுப்படுதலையும் எமக்கு தருகிறது. கடந்த 2 நாட்கள், திருவாரூர் பக்கமுள்ள சில கோவில்களுக்கு சென்றுவந்தோம். திருமுக்கூடல், கோவில்வன்னி போன்ற 1000 வருடங்கள் பழமையான, பாடல்பெற்ற, பெரிய மகான்கள் வந்து சென்ற, இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆறுதலளித்த கோவில்கள் இன்று விளக்கு எரிக்கக்கூட எண்ணெய் இல்லாமல் முற்றாக சிதிலமடைந்து இருப்பதைக் காணும் போது பெருஞ்சோகம் ஏற்படுகிறது. ஒருகாலத்தில் உள்ளூர் மக்களின் உழைப்பால் கட்டப்பட்ட கோவில்களில் இன்று மக்கள் தினசரி வருவது கூடக் கிடையாது. கோவில் பராமரிப்பில் உள்ள அரசியல் தந்திரங்கள் மக்களாட்சி மீது விரக்தியை தந்தன.


இந்த சமயத்தில் எனக்கு டெல்லியில் உள்ள சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பில் கட்டப்பட்ட சுவாமி நாராயணா கோவில் ஞாபகம் வருகிறது. 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் வாழ்ந்த ஒரு நாராயணன் என்ற முற்றும்துறந்த துறவியின் பற்றற்ற வாழ்க்கைப் போதனைகளை நமக்கு எடுத்துச்சொல்ல இது போன்ற ஆடம்பரம் தேவைப்படுகிறது. அந்தக் கோவிலில் இருந்தபோது, அமைதிக்கு பதிலாக காரணமறியாத வெறுமை தான் எனக்கு ஏற்பட்டது. 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை பாதுகாக்க ராணுவ பகுதியில் நுழைவதற்கு செய்யப்படும் சோதனைகளைப் போல் பல கட்டங்களில் பல வித ஆய்வுக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படும் போது, இந்த பணத்தைக்கொண்டு எத்தனை குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிசெய்திருக்க முடியும், எத்தனை குழந்தைகளுக்கு கல்வி தந்திருக்க முடியுமென்று மனது கணக்கிட்டது. வாழ்க்கைக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தரவேண்டிய எளிமையான ஆன்மீகம், கண்முன்னே வர்த்தகமாக்கப்பட்டு; பின் அரசியலாக்கப்படும் போக்கு வேதனையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக