புதன், 24 பிப்ரவரி, 2010
தோல்வியின் மரைவலி
திட்டமிடல் நிகழ்வுக்காக ஒருமுறை கழுகுமலைக்குச் சென்றிருந்தேன். மலையேறி, மேலிருந்து முதன்முதலாக வெட்டுவான் கோவிலைப் பார்த்ததும், மனம் கொஞ்ச நேரம் திகைத்து நின்றது. அதிகம் அறியப்படாமல் எங்கோ கண்காணாத இடத்திலிருக்கும், அந்த அற்புதத்தைப் பார்த்தபோது, நெஞ்சுக்குள் மாமழை பெய்வது போலிருந்தது. மதுரைக்குத் திரும்பிய பின்பும், மூன்று நாட்களுக்கு மனம், ஆளில்லாக் காட்டில் காயும் முழுநிலாவைப்போல கம்பீரமான மௌனத்துடன் நின்றிருந்த அந்தக் கோவிலையே சுற்றிக்கொண்டிருந்தது. கோவிலை வடிவமைத்த யாரோ பெயர் தெரியாத சிற்பியின் கனவும், அது நிறைவேறாமல் பாதியிலேயே நின்றுபோன சோகமும் எனக்குள் வியாபித்தது. வெற்றி பெறாத பல உன்னத முயற்சிகள் அவை வெற்றிபெறவில்லை என்ற ஒரே காரணத்துக்காக உலகின் கவனத்திலிருந்து நிராகரிக்கப்படும் தருணங்கள் வலிநிறைந்தவை. மனிதன் அங்கீகாரத்துக்கு ஏங்கும் மிருகம். சமூகத்தின் நிராகரிப்புக்கு ஆளாகும் மனிதனின் நல்ல பண்புகள் வெளிப்படாமலேயே கரைந்துவிடுகின்றன. நமது பணிகளில் நாம் எப்போதும் தனியாளாக எதையும் சாதிப்பதில்லை. எல்லாம் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு தான். வெற்றி பெற்ற செயல்களில் இயல்பாகவே அங்கீகாரம் தாமாக வந்துவிடுகிறது. தோல்விபெற்ற பல பணிகளிலும் தீவிரமாய் உழைத்தவர்களின் வியர்வை கரைந்திருப்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். உண்மையில், தோல்வி பெறும் போது அல்லது சிக்கலில் இருக்கும் போது தான் நமக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. வெட்டுவான் கோவில் எனக்குள் செதுக்கிய இந்த செய்தி எனக்குள் மூடியிருந்த பல ஜன்னல்களை திறந்து வைத்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக