புதன், 24 பிப்ரவரி, 2010
நேபாளம் இந்தியாவை விட பெரியது...
ஒருமுறை வடக்கே களப்பார்வைக்காக சென்று கொண்டிருந்தபோது, கூட வந்திருந்த நேபாள நண்பருடன் நேபாளத்தின் சமீப அரசியல் மாற்றம், நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேற்றுமைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேச்சினூடாக அவர், “நேபாளம், இந்தியாவைவிட பெரியது” என்றார். எப்படி என்றபோது, “இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை அதிகபட்சம் எவ்வளவு நேரத்தில் சென்றடைவீர்கள்?" என்று கேட்டார். நான், தமிழ்நாட்டிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கோ இமய மலைப்பகுதிக்கோ செல்லும் தூரத்தை மனதில் கொண்டு, “அதிகபட்சம் 4 நாட்கள்” என்றேன். நேபாளத்தில், தனது திட்டம் செயல்படும் கிராமத்தை சென்றடைய அவருக்கு 7 நாட்கள் ஆனதாகக் குறிப்பிட்டு, மலைகளினூடான, சாலைகளற்ற பாதை; நிச்சயமற்ற பயணத்தின் தன்மையை விளக்கியபோதுதான் எனக்கு உண்மை புரியத் தொடங்கியது. பொதுவாக இங்கு 4 மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு அங்கு ஒரு நாள் ஆகக்கூடிய துன்பத்தினை விவரித்தார். மனித மனம் தூரத்தை கணக்கில் கொண்டு பெரிய தேசம், சிறிய தேசம் என பிரிக்கிறது. தூரத்தைவிட, அதனை அடைய ஆகும் காலம்; அதற்கான போக்குவரத்து வசதிகளை நாம் கவனிக்கத் தவறுவதை உணர்ந்தேன். அந்த வகையில் பார்க்கப்போனால், அமெரிக்கா நம்மை விட சிறிய தேசம். நேபாளம் நம்மைவிட பெரிய தேசம். தொலைவினை அளவிட தூரத்தை விட, காலம் சரியான அளவுகோலாக இருக்க முடியும் எனத்தோன்றியது. இதுபோல், இயந்திரத்தனமான கல்வி முறை எனக்குள் திணித்த நம்பிக்கைகள், கற்பிதங்கள் ஆகியவை அனுபவங்கள் மூலம், மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய பார்வைகள் உதிக்கும் தருணங்கள் எனக்கு போதிமரமாய் இருந்துள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக